உத்தரப் பிரதேச காங்கிரஸ் புதிய மாநிலத் தலைவர் பற்றிய அறிவிப்பை கட்சி விரைவில் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, அந்தந்த மாநிலத் தலைவர்களை ராஜிநாமா செய்யுமாறு கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தினார். இதனால், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவி காலியாகவுள்ளது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்திலுள்ள கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் எம்பி ரஷித், பிரமோத் திவாரி, ராஜேஷ் மிஸ்ரா உள்ளிட்டோருடன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தில்லியில் இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் மூலம் கட்சியின் புதிய மாநிலத் தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ரஷித் பேசுகையில், "உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளது. எனினும், இது உள்கட்சி கூட்டம் என்பதால் இதுபற்றிய தகவல்களை வெளியிட முடியாது" என்றார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.