பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பி.இசட். ஸமீர் அகமது கான், தலித் தலைவரின் வாயில் உணவை ஊட்டியதோடு மட்டுமல்லாமல், பிறகு வாயிலிருந்து உணவை எடுத்து தான் சாப்பிட்ட விடியோ வைரலாகியுள்ளது.
மக்களிடையே எந்த மத, இன வேறுபாடும் இல்லை என்பதை உணர்த்தவே தான் இவ்வாறு செய்ததாகவும் ஸமீர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த விடியோவுக்கு பல தரப்பிலிருந்தும் கருத்துகள் குவிந்து வருகின்றன.
டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி நினைவு நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தலித் தலைவர் நாராயணா சுவாமிஜியுடன் ஸமீர் பங்கேற்றிருந்த போது, மிகவும் உணர்ச்சிப் பொங்க பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அனைவர் முன்னிலையிலும் இப்படி செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிலர் சுதாரித்துக் கொண்டு கைதட்டி வரவேற்றனர்.
மேலும், அனைவரும் மனிதர்கள்தான்,. மனிதர்களுக்குள்ளான பிணைப்பை ஜாதி, மதத்தால் நீக்க முடியாது என்றும் ஸமீர் கூறியிருந்தார்.