பொதுவாக திருமண வைபவங்கள் தொடர்பாக புகைப்படங்கள் விடியோக்களை அவர்களது உற்றார், உறவினர்கள் அவ்வப்போது பார்த்து மகிழ்வது வழக்கம். ஆனால், திருமண வைபத்தின்போது நிகழும் சம்பவங்கள், அந்த விடியோக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி விடுவதுதான் சோகம்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில், ரேமு என்ற கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி நடந்த திருமண வைபவத்தில் நிகழ்ந்த சம்பவம்தான் தற்போது அதிகம் பேரால் பகிரப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிறது.
காரணம், திருமண சடங்குகள் கோலாகலமாக நடந்து கொண்டிருக்க, உற்றார், உறவினர்கள் புடை சூழ மணமகன் தாலி கட்ட தயாராக இருந்தார். அப்போது யாருமே எதிர்பாராத நிலையில், சினிமாவில் மட்டுமே இதுவரை பார்த்திருக்கும் காட்சி போல மணமகள் எழுந்து நின்று ஆவேசமாகப் பேசத் தொடங்கினார். தனது கையிலிருந்த வளையல் உள்ளிட்ட ஆபரணங்களை கழற்றி எரிந்து கொண்டே, தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், ஏற்கனவே தனக்கு திருமணமாகிவிட்டது, மீண்டும் எப்படி திருமணம் செய்து கொள்வது என்றும் கேட்டு உற்றார் உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதனைக் கேட்ட குடும்பத்தார், அவரவர் பாணியில் மணமகளை சமாதானப்படுத்த முயல, இவை அனைத்தையும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மணமகன் மயங்கி கீழே விழுந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருமணம் இறுதியாக நின்றே போன நிலையில், மறுநாள் வேறொரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.