அசாமில் இரண்டு வாரமாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அம்மாநில முதல்வர் இன்று பார்வையிட்டார்.
கடந்த சில நாள்களாக அசாம் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநிலத்தின் 34 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் இதுவரை 7.19 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் பலியாகினர்.
இதையும் படிக்கலாம்: கனமழை: கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் பல்வேறு பகுதியில் சிக்கித் தவித்த 26,489 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 624 நிவாரண முகாம்களும், 729 நிவாரண விநியோக மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,32,717 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1,30,596.12 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அசாம் அரசு கச்சார் மற்றும் டிமா ஹசாவ் மாவட்டங்களுக்கு தலா 2 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது.
அதற்கு முன், ஹோஜாய் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச நிவாரணம் வழங்குவதற்காக 3 கோடி ரூபாய் கூடுதல் பட்ஜெட்டை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று டிமா ஹசாவ் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பார்வையிட்டார்.