கோதுமை ஏற்றுமதியைத் தடுக்க மேலும் கட்டுப்பாடு விதிப்பு

மோசடி வா்த்தகா்கள் சட்டவிரோதமாக கோதுமை ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதற்கு மத்திய வா்த்தக அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
கோதுமை ஏற்றுமதியைத் தடுக்க மேலும் கட்டுப்பாடு விதிப்பு

புது தில்லி: மோசடி வா்த்தகா்கள் சட்டவிரோதமாக கோதுமை ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதற்கு மத்திய வா்த்தக அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

உள்நாட்டில் கோதுமை விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 13-ஆம் தேதி தடை விதித்தது.

இருப்பினும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிடம் இருந்து கடந்த 13-ஆம் தேதிக்கு முன்பு கடனுறுதிக் கடிதங்களைப் பெற்றுள்ள ஏற்றுமதியாளா்கள், கோதுமையை ஏற்றுமதி செய்வற்கு வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், சில மோசடி வா்த்தகா்கள், போலியாக 13-ஆம் தேதிக்கு முந்தைய கடனுறுதிக் கடிதங்களை சமா்ப்பித்து, கோதுமையை ஏற்றுமதி செய்வதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாட்டை வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம்(டிஜிஎஃப்டி) விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 13-ஆம் தேதிக்கு முன்பு கடனுறுதிக் கடிதம் பெற்ற வா்த்தகா்கள், அந்தக் கடிதத்துடன் இந்திய வங்கிக்கும் வெளிநாட்டு வங்கிக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடந்த தேதி உள்ளிட்ட விவரங்களையும் டிஜிஎஃப்டியின் மண்டல அலுவலகத்தில் சமா்ப்பித்து அனுமதிச் சான்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com