கரோனா தொற்று நோயைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆஸ்துமா நோயாளிகளுக்கான மீன் மருந்து சிகிச்சை இந்தாண்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தாண்டும் மீன் மருந்து சிகிச்சையளிக்கும் நிகழ்வை நடத்துவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
கௌட் குடும்பம் கடந்த 175 ஆண்டுகளாக மக்களுக்கு மீன் மருந்து அளிப்பதை பல தலைமுறைகளாக இலவசமாக செய்து வருகின்றனர். இதற்கு தெலங்கானா அரசும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
கரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ல் மீன் பிரசாத விநியோகத்தை பாதினி குடும்பத்தினர் ரத்து செய்தனர். அதையடுத்து கடந்தாண்டும் கரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மீன் சிகிச்சை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தாண்டு தொற்றுநோய் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். எனவே இந்தாண்டும் மீன் மருந்து பிரசாதம் வழங்கப்படாது என்று முடிவு செய்துள்ளதாக கௌட் குடும்பத்தினர் கூறினர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் மீன் பிரசாதம் பெற ஹைதராபாத்தில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.