தமிழகத்திற்கு நேற்று மேற்கொண்ட பயணம் மறக்க முடியாதது என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நேற்று(வியாழக்கிழமை) சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.31,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடக்கி வைத்தார்.
ரூ.500 கோடியில் மதுரை-தேனி இடையே அகல ரயில் பாதை, ரூ.590 கோடியில் சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 3-வது ரயில்பாதை, ரூ.116 கோடியில் பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் சென்னையில் கட்டப்பட்ட 1,152 வீடுகள் திறப்பு, எண்ணூா்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் திருவள்ளூா்-பெங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள் ஆகியவற்றை பிரதமர் தொடக்கிவைத்தார். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழகம் வந்த பிரதமருக்கு அரசு சார்பிலும் பாஜக சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவே அவர் தில்லி திரும்பினார்.
இந்நிலையில் தமிழக பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நன்றி தமிழ்நாடு; நேற்றைய பயணம் மறக்க முடியாதது' என்று பதிவிட்டு நேற்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.