இந்தியாவில் இதுவரை கரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்ட எண்ணிக்கை சனிக்கிழமை காலை 7 மணியுடன் 193 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை 1,93,13,41,918 தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12-14 வயதுக்கு உட்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி கடந்த மாா்ச் 16 தொடங்கப்பட்டது. இதுவரையில் சுமாா் 3.36 கோடிக்கும் அதிகமான (3,36,37,974) இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
18-59 வயது உடையவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை (மூன்றாவது தவணை) தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோா் விகிதம் 98.75 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,158 போ் குணமடைந்துள்ளனா். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 4,26,09,335.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,685 புதிய கரோனா தொற்று நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த 24 மணி நேரத்தில் 4,47,637 கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.