கர்நாடகத்தில் மங்களூரு பல்கலைக் கழக மாணவிகள் சிலர் பல்கலைக் கழக வளாகத்தில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதிக் கேட்டு தக்ஷின கன்னட மாவட்டத்தின் துணை ஆணையரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் 12 மாணவிகள் கடந்த சனிக்கிழமையன்று பல்கலைக் கழக வளாகங்களில் மீண்டும் ஹிஜாப் அணிந்து வருவதற்கான கோரிக்கையினை முன்வைத்தனர். அவர்கள் இன்றும் (திங்கள்கிழமை) அதே கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிக்க | சித்து மூஸேவாலா கொலை: பஞ்சாபில் இன்று அமைதிப் பேரணி
பல்கலைக் கழக வளாகத்தில் ஆடை கட்டுப்பாடு இருப்பதால் பல்கலைக் கழக அதிகாரிகள் கடந்த சனிக்கிழமையும், இன்றும் அவர்களுக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி தரவில்லை.
இதனையடுத்து, மூன்று மாணவிகள் இந்த விவகாரம் தொடர்பாக கன்னட மாவட்டத்தின் துணை ஆணையர் ராஜேந்திராவிடம் முறையிட்டனர்.
இது தொடர்பாக துணை ஆணையர் ராஜேந்திரா கூறியிருப்பதாவது, “ கல்லூரி நிர்வாக அதிகாரிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்துள்ளனர். ஹிஜாப் மட்டுமல்லாது, காவித் துண்டுகள் மற்றும் மற்ற அமைதியை சீர்குலைக்கும் எந்த ஒரு ஆடையையும் அனுமதிக்கவில்லை. இந்த முடிவை கல்லூரி நிர்வாகம் சமீபத்தில் வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே எடுத்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பில் ஹிஜாப் அணிவது அடிப்படையான நம்பிக்கை இல்லை எனவும், கல்லூரி சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் எனக் கூறியிருந்தது. என்னிடம் முறையிட்ட மாணவிகளிடம் நான் கல்லூரி நிர்வாகத்தின் முடிவுகளில் தலையிட முடியாது எனக் கூறினேன். மேலும், கல்லூரி வளாகத்தில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர்களிடம் கூறினேன்.” என்றார்.