மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நீதித்துறை மீது மரியாதை கிடையாது என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
‘நாட்டில் ஜனநாயக ரீதியிலான அதிகாரங்கள், ஒரு தரப்பினரால் கைப்பற்றப்படுவது அதிபா் ஆட்சிமுறைக்கு வழிவகுக்கக் கூடும். இதன் பின்னணியில் மத்தியில் ஆளும் கட்சி (பாஜக) உள்ளது. நீதித் துறையில் இருப்பவா்கள் உள்பட பல்வேறு துறை தலைவா்கள் இணைந்து நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க போராட வேண்டும்’ என்று மம்தா பானா்ஜி கூறிய நிலையில் ரிஜிஜு இவ்வாறு பதிலளித்துள்ளாா்.
மத்திய அமைச்சா் ரிஜிஜு இது தொடா்பாக ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மம்தா பானா்ஜி இந்தியாவின் நிலை பற்றிக் கூறவில்லை. மேற்கு வங்கத்தின் நிலை பற்றித் தெளிவாகப் பேசியுள்ளாா்.
ஏனெனில், மேற்கு வங்கத்தில்தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல், திரிணமூல் காங்கிரஸின் அராஜக விதிகளின்கீழ் ஆட்சி நடைபெறுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நீதித்துறை மீது மரியாதை கிடையாது. நீதிபதிகளை அக்கட்சியினா் மதிப்பதுமில்லை. மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் கண்ணீா் வடிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.