தொங்கு பாலம் விபத்தையடுத்து குஜராத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் கடந்த அக். 30 (ஞாயிற்றுக்கிழமை) மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோா் நதிக்குள் விழுந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 135-ஆக ஆனது.
மேலும் தற்போது 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் காணாமல் போன 2 பேரைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மோர்பி தொங்கு பாலம் விபத்தையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும் இன்று அரசு சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யபட்டுள்ளது.
முன்னதாக, விபத்து நடந்த மோர்பி பகுதியை நேற்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் காயமடைந்து மோர்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.