காங்கிரஸ் முன்னாள் தலைவர், பிரபல திரைப்பட நடிகர் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் என மூவர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த மூவரும் பாஜகவில் இணைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் எஸ்.பி.முத்தானுமேகௌதா, நடிகராக இருந்து அரசியலில் களம் கண்ட சசி குமார் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் அனில் குமார் ஆகியோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
கர்நாட மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடக மாநில பாஜக தலைவர் நளீன் குமார் கட்டீல் முன்னிலையில் இவர்கள் மூவரும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் வீரரைப் பாராட்டிய அஸ்வின்!
மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.முத்தானுமேகௌதா காங்கிரஸில் இருந்து விலகுவதாக தனது முடிவை கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இவர் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முத்தானுமேகௌதா சுயேட்சையாக போட்டியிடப் போவதாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இருப்பினும், அவர் கட்சித் தலைமையால் சமாதானப்படுத்தப்பட்டார். இந்நிலையில், இன்று (நவம்பர் 3) அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
கன்னட நடிகரான சசி குமார் முன்பு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தில் இருந்துள்ளார். அவர் 13வது மக்களவைத் தேர்தலில் சித்ரதுர்கா தொகுதியில் கடந்த 1999ஆம் ஆண்டு ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஹோசதுர்கா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதையும் படிக்க: குஜராத் தொங்கு பால விபத்து: அனைத்து உடல்களும் மீட்பு
அனில் குமார் கூடுதல் முதன்மை செயலராக இருந்துள்ளார். கடந்த ஜூலையில் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.