பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு (இடபிள்யுஎஸ்) கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நவம்பர் 7ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 2019, ஜனவரி 8-ஆம் தேதி மக்களவையிலும், 9-ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அப்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினாா்.
அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு நடத்தியது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீா்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் அரசியல் சாசன அமா்வு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.