புது தில்லி: தங்கள் பெயரில் வெளியாகும் வேலை வாய்ப்புக் குறுந்தகவல்கள் உண்மையில்லை என்று தேசிய தகவல் மையம் (என்ஐசி) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலை வாய்ப்பு தொடர்பாக போலியான எஸ்எம்எஸ் ஒன்று என்ஐசி பெயரில் வெளியாகியுள்ளதாகவும், பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பலால் இந்த குறுந்தகவல் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து என்ஐசி இந்த எச்சரிக்கைத் தகவலை வெளியிட்டுள்ளது.
போலியான குறுந்தகவல் தொடர்பான தகவல் கிடைத்ததும் உடனடியாக இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய தகவல் மையம், இந்த குறுந்தகவல் எதுவுமே என்ஐசி-ஆல் அனுப்பப்படவில்லை என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என்ஐசி பெயரை பயன்படுத்தி, போலியான குறுந்தகவல் செய்தி வெளியாகி வருவதாகவும், இதன் மூலம் பணமோசடி நடைபெறும் அபாயம் இருப்பதாகவும், இது தொடர்பாக என்ஐசி சார்பில் புகார் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், போலி குறுந்தகவல் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிக்கை வெளியிட்டுள்ளது.