திருப்பதி: பக்தர்களின் காணிக்கை ரூ.15,938 கோடி பணம், 10,258 கிலோ தங்கத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
திருமலை ஏழுமலையானைத் தரிசித்த பின் பக்தர்கள் தங்களால் இயன்ற பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாகளாகச் செலுத்தி வருகின்றனர். இந்த வேண்டுதல் காணிக்கைகளை தேவஸ்தானம் தங்கம், வெள்ளி, பணம், சில்லறை நாணயங்கள் என தனித்தனியாகப் பிரித்து கணக்கிட்டு வங்கியில் வரவு வைத்து வருகிறது.
அதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தியுள்ள 10 அறக்கட்டளைகள் மற்றும் திட்டம் உள்ளிட்டவற்றிற்கும் பகதர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், நன்கொடைகள் வரவு, செலவு போக மீதமுள்ளவற்றை வங்கிகளில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் தேவஸ்தானம் மக்களுக்கும், பக்தர்களுக்கும் சேவைகளை செய்து வருகிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, ரூ.15,938.68 கோடி பணமும், 10,258.37 கிலோ தங்கக் கட்டிகளையும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு அல்லது மாநில அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதில்லை என்று தீர்மானித்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், மத்திய அல்லது மாநிலப் பத்திரங்களில் முதலீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. வங்கிகளால் சேகரிக்கப்படும் நன்கொடைகளும் அதே வங்கிகளில் தற்போதுள்ள வட்டி விகிதத்தின்படி முதலீடு செய்யப்படுகின்றன என முதலீடுகள் மற்றும் டெபாசிட்கள் குறித்து சனிக்கிழமை வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.