தலைநகர் தில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான பிரிவில் இருக்கும் நிலையில், கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த சில நாள்களாக காற்றின் தரம் 'கடுமை'(severe) பிரிவில் இருந்தது. இந்நிலையில் இன்று தொடர்ந்து 2 -வது நாளாக இன்று காற்று மாசு 'மிகவும் மோசம்' பிரிவில் இருந்து வருகிறது. காற்றின் தரம் 326 புள்ளிகளாக உள்ளது.
அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதனால் காற்று மாசைக் குறைப்பதற்காக, வாகனங்கள் இயக்கத்தைக் குறைப்பதற்காக தில்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை, வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் பேசியதாவது:
டிரக்குகள் நுழைவதற்கு, பள்ளிகள் செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கிக் கொள்ளப்படுகிறது. தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்திக் கொள்ளப்படுகிறது. பாலம், நெடுஞ்சாலை, சாலைகள் போன்ற கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இருப்பினும், தனியார் கட்டட பணிகளுக்கான தடை நீடிக்கிறது. பிஎஸ் 3 பெட்ரோல் வகை கார்கள், பிஎஸ் 4 டீசல் வகை வாகனங்களுக்கான தடை நீடிக்கிறது என்றார்.
காற்று மாசு தொடர்ந்து, மோசமான பிரிவில் உள்ள நிலையில், பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.