சரத் பவாரின் உடல்நிலையைப் பொறுத்து பாரத் ஜோடோவில் பங்கேற்பார்: அசோக் சவான்
மகாராஷ்டிரத்தில் தொடங்கவிருக்கும் ராகுலின் நடைப்பயணத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்பது அவரது உடல்நிலையைப் பொறுத்தே அமையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல், இன்று மாலை மகாராஷ்டிரத்தின் நான்டெட் மாவட்டத்தில் பயணத்தைத் தொடங்குகிறார்.
முன்னதாக இந்த நடைப்பயணத்தில் என்சிபி தலைவர் பவார்(81) பங்கேற்குமாறு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இந்நிலையில், சமீபத்தில் காய்ச்சல் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளால் பவார் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நான்டெட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சவான், சரத் பவார் நவ.10ல் யாத்திரையில் சேர வாய்ப்புள்ளதாகவும், அது அவரின் உடல்நிலையைப் பொறுத்து அமையும் என்று தெரிவித்தார்.