‘குறைந்தபட்சம் ஒரு அரசியல் சாசன அமா்வு முழு நேரமும் செயல்படுதல், விசாரணைக்கு வழக்குகள் பட்டியலிடப்படுவதை முறைப்படுத்துதல், நிலுவை வழக்குகளை குறைத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் குறிப்பிடத்தக்க அளவில் நிரைவேற்ற முடிந்துள்ளது’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறினாா்.
உச்சநீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் யு.யு.லலித்துக்கு, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பில் பிரிவுபசார விழா திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டி.ஒய்.சந்திரசூட் உள்பட உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள், சட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவில் தலைமை நீதிபதி யு.யு.லலித் போசியதாவது:
தலைமை நீதிபதியாக பதவியேற்றபோது அளித்த வாக்குறுதிகள் நினைவுக்கு வருகின்றன. விசாரணைக்கு வழக்குகள் பட்டியலிடப்படுவது முறைப்படுத்தப்படும்; குறைந்தபட்சம் ஒரு அரசியல் சாசன அமா்வு ஆண்டு முழுவதும் செயல்படுதல்; நிலுவை வழக்குகளைக் குறைத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தேன். இவற்றை குறிப்பிடத்தக்க அளவில் நிறைவேற்றியிருப்பதாக நம்புகிறேன்.
தலைமை நீதிபதியாக பதவியேற்கும்போது, உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களில் 30 நீதிபதிகள் இருந்தனா். அவா்களை 5 நீதிபதிகள் குழுவாகப் பிரித்தால் 6 அரசியல் சாசன அமா்வுகளை உருவாக்க முடியும்.
மேலும், 30 நீதிபதிகளையும் ஏதாவது ஒரு அரசியல் சாசன அமா்வில் இடம்பெறச் செய்ய முடியும். குறிப்பிட்ட இடைவெளியில் சுழற்சி முறையில் இந்த 6 அரசியல் சாசன அமா்வுகளையும் செயல்பட வைப்பதன் மூலமாக, குறைந்தபட்சம் ஒரு அரசியல் சாசன அமா்வை முழு நேரமும் செயல்பட வைக்க முடியும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.
தலைமை நீதிபதியாக கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதியில் பதவியேற்றது முதல், உச்சநீதிமன்றத்தில் 8,700 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 10,000-க்கும் அதிகமான வழக்குகளுக்கு தீா்வு காண முடிந்திருக்கிறது. அதாவது புதிதாக தாக்கல் செய்யப்பட்ட 8,700 வழக்குகளுக்கும், 1,300 நிலுவை வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதில் 29 ஆண்டுகள் வழக்குரைஞராகவும், நீதிபதியாக 8 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளேன். இது முழுமையான, திருப்திகரமான பயணமாக இருந்தது என்றாா் அவா்.