பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் உள்ள கேம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நவம்பர் 11ஆம் தேதி திறந்துவைக்கவிருக்கிறார்.
பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க இரண்டாவது முனையம் கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டால், தற்போது கையாளும் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகக் கையாளும் வாய்ப்பு ஏற்படும்.
சுமார் 5,000 கோடி ரூபாயில் கட்டப்பட்டிருக்கும் இந்த இரண்டாவது முனையத்தின் மூலம், பெங்களூரு விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகளை கையாளும் நிலையில், இது 5-6 கோடியாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்க.. காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
இந்த விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் முழுக்க முழுக்க தோட்டத்தைப் போல உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இங்குச் சென்று வந்தவர்கள், ஒரு தோட்டத்தில் உலவச் சென்றது போல உணர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இங்கு தொங்கும் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விமான நிலையம் முழுக்க புதுப்பிக்கத்தக்க எரிபொருள்தான் 100 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது என்பது இதன் மிகப்பெருமை வாய்ந்த அடையாளமாக மாறியுள்ளது.