ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற பிரதமர் மோடி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டதாக வெளியான விடியோவிற்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் அம்மாநிலத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க | 7 ஆண்டுகளாக பாஜக என்ன செய்தது? காங்கிரஸ் தலைவர் கேள்வி
இந்நிலையில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்திற்காக ஹிமாச்சலப்பிரதேசம் வந்த பிரதமர் மோடி சாலை வழியாக பொதுக்கூட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அவ்வழியாக செல்லவே அதற்கு பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு வழிவிடப்பட்டது. இந்த காட்சிகள் அடங்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த விடியோவிற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆம்புலன்ஸ் வருவது போன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டு விடியோ எடுக்கப்பட்டதா? திடீரென நடக்கும் சம்பவத்தை எப்படி விடியோ எடுத்தனர்? போன்ற கேள்விகளை சமூக வலைத்தளங்களில் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிக்க | கலகத் தலைவன் திரைப்படத்தின் ‘ஹே புயலே’ பாடல் வெளியீடு
பிரதமர் மோடியின் வாகனத்திற்குள்ளேயே இருந்து விடியோ எடுக்கப்பட்டதும், ஆம்புலன்ஸ் வரும் வழித்தடத்தில் மற்றொரு கேமராவைப் பயன்படுத்தி விடியோ எடுக்கப்பட்டதும் தற்செயலானதா அல்லது திட்டமிட்ட ஒன்றா என கேள்விகளால் இந்த விடியோ விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.