தில்லியில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றால் அடுத்த ஐந்தாண்டுகளில் தில்லி தூய்மையாகிவிடும் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
கிழக்கு தில்லியில் உள்ள காஜிபூர் குப்பைக் கிடங்குக்குச் சென்ற சிசோடியா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காஜிபூர் குப்பைக் கிடங்கின் உயரம் குறைந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்காகவே, பாஜக தலைமையிலான தில்லி மாநகராட்சி அதிலிருந்து குப்பைகளை எடுத்து அருகிலுள்ள பகுதிகளில் கொட்டுகிறது. பாஜக.வுக்கு பிரச்னையைத் தீர்க்கும் எண்ணமே இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தூய்மையான தில்லிக்காக டிசம்பர் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் மாநகராட்சி தேர்தலுக்கு மக்கள் துடைப்பம்(ஜாடு) கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.
முதல்வர் கேஜரிவால் ஒரு பொறியாளர் மற்றும் நுணுக்கமான திட்டங்களை உருவாக்குகிறார். தில்லியின் பல்வேறு பகுதிகளில் குவிந்துள்ள குப்பை மலைகளை அகற்றவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வரும் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வென்றால், அடுத்த ஐந்தாண்டுகளில் தில்லியில் உள்ள குப்பை மலைகள் அனைத்தும் காணாமல் போய்விடும், அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளதாக சிசோடியா கூறினார்.