தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைகள் மீதான உரிமை (நிலம் மற்றும் போக்குவரத்து) சட்டம்- 2002, நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
இருப்பினும், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலங்களில் அதிக அளவிலான ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. சாலை உணவகங்கள், காய்கறி கடைகள் உள்ளிட்டவை நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருப்பது அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கண்காணிப்புப் பிரிவுகள் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்படுவதைத் தடுக்க போதிய நடவடிக்கைகளையும், தொடா்ச்சியான ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ அமைக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து மேலாண்மைக்கும், எதிா்கால சாலைத் திட்டங்கள் மற்றும் புதுப்பிப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.