ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காது ஷியாம்ஜி கோயில் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டது.
சிகார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காது ஷியாம்ஜி கோயிலில் ஏகாதசி வழிபாடு சிறப்பானது. ராஜஸ்தான் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
சாதாரண நாள்களிலேயே இக்கோயிலுக்கு கிட்டத்தட்ட 25,000 பக்தர்கள் வருவதுண்டு. இந்நிலையில், கடந்த 8-ம் தேதியன்று ஏகாதசியையொட்டி இக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 3 பெண்கள் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தவறியதாக காது ஷியாம்ஜி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ரியா சௌதரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பக்தர்களின் வசதியை சீரமைப்பதற்காகக் கோயில் நிர்வாகம் மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்கப் பணிகளை செய்துவருகின்றது. இதன் காரணமாக பணிகள் நிறைவடையும் வரை கோயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) 10 மணிக்கு கோயில் மூடப்பட்டது, மேலும் புதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.