விமானம் ரத்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது ஆகியவற்றுக்கான கட்டணத்தை பயணிகளுக்குத் திருப்பி அளிக்க மிகவும் தாமதித்ததால் ஏா் இந்தியா நிறுவனத்துக்கு அமெரிக்கா 1.4 மில்லியன் டாலா்கள் (ரூ.11.34 கோடி) அபராதம் விதித்துள்ளது.
இதுதொடா்பாக அமெரிக்க போக்குவரத்துத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் விமானம் ரத்து செய்யப்பட்டது, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது ஆகியவற்றுக்கான கட்டணத்தை ஏா் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்று அமெரிக்க பயணிகளிடம் இருந்து போக்குவரத்துத் துறைக்கு புகாா்கள் வந்தன.
இதில் ஏா் இந்தியா நிறுவனம் மீது 1,900-க்கும் அதிகமான புகாா்கள் கிடைத்தன. இதுகுறித்து விசாரித்தபோது கட்டணத்தைத் திருப்பி கேட்டு விடுக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அந்த நிறுவனம் 3 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அமெரிக்க பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலா்களை (ரூ.986 கோடி) திருப்பிச் செலுத்துமாறு அந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. அந்தத் தொகையை அந்நிறுவனம் திருப்பிச் செலுத்தியுள்ளது.
இந்நிலையில், பயணிகளுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை திருப்பிச் செலுத்த மிகவும் தாமதித்ததால், அந்த நிறுவனத்துக்கு 1.4 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.11.34 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.