ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 41 வயதான தொழிலதிபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த, தொழிலதிபரான மன்மோகன் சோனி இன்று காலையில் தனது அறையை தாழிட்டு பிறகு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு இன்று காலை அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது, அவர் தரையில் கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், மன்மோகன் சோனியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று சாஸ்திரி நகர் காவல் நிலைய அதிகாரி திலீப் சிங் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த சில நாள்களாக வருத்தத்தில் இருந்ததாகவும், குடும்பத்தினருடன் அவர் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.