மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதன்கிழமை இன்று (நவ.16) நேர்மறையுடன் நிறைவடைந்தது.
நேற்றைய வணிக நேர முடிவில் ஏறுமுகத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தை வணிகம், இன்றும் உயர்வுடன் நிறைவடைந்துள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 107.73 புள்ளிகள் உயர்ந்து 61,980.72 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.17 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 6.25 புள்ளிகள் உயர்ந்து 18,409.65 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. நிஃப்டியில் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை. மொத்த வர்த்தகத்தில் இது 0.034 சதவிகிதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 17 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 13 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதானி குழும பங்குகள் அனைத்தும் கடும் சரிவைச் சந்தித்தன.
அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன.
கோட்டாக் வங்கி, டாக்டர் ரெட்டி, எச்.யு.எல், எச்டிஎப்சி வங்கி, சர்பார்மா, ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.