இளம்பெண் ஷ்ரத்தாவைக் கொடூரமாகக் கொன்று உடலை 35 பாகங்களாக வெட்டி வீசிய நபரை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த கால்சென்டர் ஊழியரான ஷ்ரத்தா, அஃப்தாப் பூனாவாலா என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை அஃப்தாப் கொடூரமான முறையில் கொன்றுள்ளார்.
தனது மகளைக் காணவில்லை என ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர். அஃப்தாபை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆரம்பத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நடந்துகொண்ட அஃப்தாபிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
ஷ்ரத்தாவைக் கொன்று உடலை 35 பாகங்களாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியதாகவும், உடல் பாகங்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேசிய சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத், ஷ்ரத்தாவைக் கொன்ற கொலையாளியை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும். புதிய நபரை நம்பத்தொடங்கும் முன்பு பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் காதல் என்ற பெயரில் உறவாடுவார்கள். ஆனால், நாம் நமது மகள்களை இழந்துகொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இது போன்ற வழக்குகளில் சட்டம் எதையும் செய்ய முடியாது. சமூகத்திடம் இதனை விட்டுவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.