தில்லியில் ஷ்ரத்தா வால்கரை அவரது காதலன் கொடூரமாக கொலை செய்தது லவ்-ஜிகாத் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
தில்லியில் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடன் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வால்கர் என்ற பெண்ணை அஃப்தாப் என்ற இளைஞன் 35 துண்டுகளாக வெட்டி தில்லியின் பல பகுதிகளில் வீசியது நாட்டில் அதிர்வலைகளை கிளப்பியது. இதனையடுத்து, அஃப்தாப் கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது அசாம் முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியதாவது: நாட்டினை தனது தாய் போன்று நினைக்கும் சக்திவாய்ந்த தலைவர்கள் இல்லையென்றால் அஃப்தாப் போன்ற இளைஞர்கள் ஒவ்வொரு நகரிலும் உருவாகுவார்கள். அஃப்தாப் மும்பையிலிருந்து ஷ்ரத்தாவை தில்லிக்கு அழைத்து வந்து லவ் ஜிகாத் என்ற பெயரில் அவரை 35 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொன்றுள்ளார். அதன்பின், அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். ஷ்ரத்தாவின் உடல் குளிர்சாதனப் பெட்டியில் இருக்க மற்றொரு பெண்ணிடம் அஃப்தாப் உலாவி (டேட்டிங்) உள்ளார்.
நாட்டினை தாய் போல் மதிக்கும் சக்திவாய்ந்த தலைவர்கள் இல்லையென்றால் அஃப்தாப் போன்ற இளைஞர்கள் நாட்டின் ஒவ்வொரு நகரிலும் உருவாகுவார்கள். நமது சமூகத்தை அவர்களைப் போன்றவர்களிடமிருந்தும் நம்மால் காப்பாற்ற முடியாது. அதனால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளை அவரால்தான் தீர்க்க முடியும் என்றார்.
லவ்-ஜிகாத் என்ற சொல் வலதுசாரி செயல்பாட்டாளர்களால், இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவர்களை மதமாற்றம் செய்வதாக முஸ்லீம் இளைஞர்கள் மீது குற்றம்சுமத்த அவர்கள் அடிக்கடி பயன்படுத்துவது என்பது குறிப்பிடத்தக்கது.