ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடப்பதற்கு காங்கிரஸ் கட்சி நடிகர்களுக்கு பணம் கொடுப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் ஒற்றுமைப் பயணத்தில் நடிகைகள் பூஜா பட், அமோல் பலேகர், ரியா சென், ராஷ்மி தேசாய், சின்னத் திரை நடிகர் சுஷாந்த் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதைத் தொடர்ந்து பாஜக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜக ஆதாரமாக காட்டும் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி பொய்யானது என விமர்சித்துள்ளது.
அமித் மால்வியா ரானே உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் நடிகர்களுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் விலை பேசிய வாட்ஸ்ஆப் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக முன்வைத்துள்ளனர்.
அந்த வாட்ஸ்ஆப் தரவுகளில், நவம்பர் மாத நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடப்பதற்கான நேரப் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தை சீர்குலைக்கவும், அவப்பெயர் ஏற்படுத்தவும் பாஜகவினர் சதிச் செயலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து 76-வது நாளாக ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.