பழங்குடியின மக்களை வனவாசி என இழிவுப்படுத்தியதற்காக அவர்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்த நடைப்பயணத்தினை மத்திய பிரதேசத்தில் மேற்கொண்டு வருகிறார். நடைப்பயணத்தின்போது பழங்குடியின சுதந்திர வீரர் தாந்தியா பீல் பிறந்த இடமான மத்திய பிரதேசத்தின் கந்துவா மாவட்டத்துக்கு சென்ற ராகுல் காந்தி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: பழங்குடியின மக்களை வனவாசி என்று இழிவுப்படுத்தும் விதமாக அழைத்ததற்கு பாஜக அவர்கள் முன் கைகட்டி மன்னிப்புக் கேட்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு நான் பிரதமர் நரேந்திர மோடி பேசியதைக் கேட்டேன். அதில் அவர் ஆதிவாசி என்பதற்கு பதிலாக வனவாசி என்ற புது வார்த்தையைப் பயன்படுத்தினார். அதற்கு அர்த்தம் ஆதிவாசிகள் என்பவர்கள் நாட்டின் முதல் உரிமையாளர்கள் கிடையாது. அவர்கள் வனத்தில் வசிப்பவர்கள் மட்டுமே என்பதாகும். பாஜக ஆட்சியில் வனப்பகுதிகள் காணமால் போயின. அதனால் பழங்குடியினருக்கு நாட்டில் வசிப்பதற்கு இடமில்லை என்றார்.