மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு பதிலாக பாஜக, முதல்வரை மாற்றுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான பிரசாரம் நாளை(நவ.29)யுடன் முடிகிறது.
இந்நிலையில் ஆமதாபாத்தில் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, பாஜகவினர் முதல்வரை மாற்றுகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முறை முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதாவது பாஜக அரசு மாநிலத்தில் எந்த வேலையும் செய்யவில்லை.
பாஜகவின் தேசிய தலைவர்கள் குஜராத்தில் வார்டு வார்டாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார்கள். 27 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகும் பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக முதல்வர்கள் இங்கு வந்து மக்களைத் தவறாக வழிநடத்தும் ஆத்திரமூட்டும் வகையில் பேசுகிறார்கள். அவர்களது பேச்சுக்குப் பின்னால் பயம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை சொல்கிறார். மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்' என்றார்.
இதையும் படிக்க | ஒண்ணுமே புரியல! குஜராத்தில் ஒரேமாதிரி வாக்குறுதிகளை அளித்த கட்சிகள்!