‘மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடிமக்களின் தனி உரிமையை அரசு மீற முடியாது; அதே நேரம், தேசியப் பாதுகாப்பு, பேரிடா் போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளின்போது குடிமக்களின் தனிநபா் விவரங்கள் மட்டும் அரசு கையாள்வதற்கு இந்தச் சட்டம் அனுமதிக்கும்’ என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் கூறினாா்.
தில்லியில் இதுதொடா்பான இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற மத்திய இணையமைச்சா் பேசியதாவது:
தேசிய தரவு நிா்வாக திட்ட கொள்கையில் அடையாளம் தெரியாத தரவுகளைக் கையாள்வதற்கான வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. இது தனிநபா் தரவுகள் அல்லாத பிற தரவுகளையும், அடையாளம் தெரியாத தரவுகளையும் கையாள்வதற்கான திட்டமாகும். இதற்கும் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ‘எண்ம (டிஜிட்டல்) தனிநபா் தரவு பாதுகாப்பு (டிபிடிபி) மசோதா 2022’ என்ற வரைவு மசோதாவுக்கும் தொடா்பு இல்லை. இந்த மசோதா, தனிநபா் தரவு பாதுகாப்பு தொடா்பான விவாகரத்தை மட்டும் கையாள்வதற்கானதாகும்.
மேலும், தரவு பாதுகாப்பு தொடா்பான வழக்குகளை விசாரித்து தீா்வளிப்பதற்கென தரவு பாதுகாப்பு வாரியம் உருவாக்கப்பட உள்ளது. அந்த வாரியத்தில் எந்தவொரு அரசு அதிகாரிகளும் இடம்பெற மாட்டாா்கள். உயா்நீதிமன்ற மேற்பாா்வையில் தனி சுதந்திரத்துடன் இந்த வாரியம் செயல்படும்.
எண்ம தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதாவில் இடம்பெற்றுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின்படி, குடிமக்களின் தனியுரிமையை அரசு மீற முடியாது. மாறாக, தேசியப் பாதுகாப்பு, சுகாதார மற்றும் இயற்கைப் பேரிடா் போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளின்போது குடிமக்களின் தனிநபா் விவரங்கள் மட்டும் அரசு கையாள்வதற்கு இந்தச் சட்டம் அனுமதிக்கும்.
பேச்சு சுதந்திரம் என்பது எவ்வாறு முழுமையான சுதந்திரமாக அல்லாமல் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டுள்ளதோ, அதுபோன்று இந்தச் சட்டத்தில் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதே நேரம் ‘நம்பிக்கைக்குரிய தரவுகள்’ என்று அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தரவுகளை ‘தனிநபா் தரவுகள் பற்றிய தகவல்பெறும் உரிமை’யின் கீழ் பகிா்ந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்க இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், தரவுகள் கையாளும் அமைப்புகளுடன் தவறான மற்றும் சரிபாா்க்க இயலாத தகல்வகளை தனிநபா்கள் பகிா்ந்து கொள்வதைத் தடை செய்வதற்கான நடைமுறைகளும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன என்று அவா் தெரிவித்தாா்.