மூன்றாவது வந்தே பாரத் ரயிலில் பொதுமக்களுக்கான முதல் பயணத்தில் 96.7 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டன.
மகாராஷ்டிர தலைநகா் மும்பை, குஜராத் தலைநகா் காந்திநகா் இடையிலான மூன்றாவது வந்தே பாரத் ரயிலை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, எஞ்சிய 6 நாள்கள் மும்பை-காந்திநகா் இடையே இயக்கப்படும். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து மேற்கு ரயில்வே மக்கள் தொடா்பு தலைமை அதிகாரி கூறுகையில், ‘மூன்றாவது வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 1,123 இருக்கைகள் உள்ளன. அந்த ரயிலில் பொதுமக்களுக்கான முதல் பயணம் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், அதில் பயணிக்க 1,086 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இது 96.7 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டதை காட்டுகிறது’ என்று தெரிவித்தாா்.