கர்நாடக வனப் பகுதிகளில் மானை வேட்டையாடியதாக தமிழக பகுதியைச் சேர்ந்த மருத்துவர் உட்பட மூன்று இளைஞர்களை கர்நாடக வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் ஒரு கரை கர்நாடகா வனப்பகுதி மற்றொரு கரை தமிழக வனப் பகுதியாக உள்ளது. கர்நாடக வனப்பகுதியில் அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாக அந்த மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனால், காவிரி கரையோர வனப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டும் வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆலம்பாடி பரிசல் துறை மறு கரையில் உள்ள கர்நாடக வனத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா அறையில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் சோதித்துப் பார்த்தனர். அப்போது, மூன்று இளைஞர்கள் நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் காற்றழுத்தத்தால் இயங்கக்கூடிய துப்பாக்கிகளை கொண்டு மானை வேட்டையாடி தமிழக பகுதிக்கு எடுத்து செல்வது தெரியவந்தது. விடியோ காட்சிகளின் அடிப்படையில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர்கள் முருகன், ராஜ்குமார் உதவியுடன் அந்த மூன்று இளைஞர்களிடமும் இரு மாநில வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: ரஜினியுடனான சந்திப்பு குறித்து ஜெயம் ரவி நெகிழ்ச்சி !
அப்போது, கர்நாடக வனப்பகுதிகளில் மான்களை வேட்டையாடிய நபர்கள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த பச்சி அண்ணன் மகன் மாரிமுத்து (27), நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் மருத்துவர் கவின் குமார் (27), ஆறுமுகம் மகன் விக்னேஷ் (25) என்பது தெரிய வந்தது. பின்னர், மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட இரு மாநில வனத்துறையினர், கர்நாடக மாநிலம் கோபி நத்தம் வனப்பகுதிகளில் மான்களை வேட்டையாடியதாகவும், அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் காற்றழுத்தம் துப்பாக்கிகள் உள்ளதாக ஒப்புக்கொண்ட நிலையில் அவற்றினை பறிமுதல் செய்து, மருத்துவர் உள்ளிட்ட மூன்று இளைஞர்களை கைது செய்து கர்நாடக வனத்துறையினர் கொள்ளேகால் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.