உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டர் மூலம் நேரில் சென்று பார்வையிட்டார்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் கங்கோத்ரி மலைத்தொடரில் உள்ள நேரு மலையேற்ற பயிற்சி நிறுவனம் மூலம் 7 பயிற்சியாளர்கள் உள்பட 41 பேர் பயிற்சிக்கு நேற்று காலை சென்றிருந்தனர்.
திரவுபதிகா தண்டா மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த விக்ரம் ராமன் உள்பட 29 மலையேற்ற வீரர்கள் சிக்கினர்.
இவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எஞ்சிய 21 மலையேற்ற வீரர்களில் 10 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியை முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்புப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை அவசரகால அடிப்படையில் செய்துதரவும் அதிகார்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.