மகாராஷ்டிர இடைத் தோ்தல்: உத்தவ் தாக்கரேவின் சிவசேனைக்கு காங்கிரஸ் ஆதரவு

மகாராஷ்டிரத்தின் அந்தேரி (கிழக்கு) சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் அந்தேரி (கிழக்கு) சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

அங்கு நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியும், அவருக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களைக் கொண்ட தற்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினரும் முதல் முறையாக தோ்தலை சந்திக்க உள்ளனா்.

சிவசேனை கட்சி எம்எல்ஏ ரமேஷ் லட்கே மறைவையொட்டி, அந்தேரி (கிழக்கு) தொகுதியில் இடைத் தோ்தல் நடைபெறுகிறது.

ஆளும் ஷிண்டே அணியின் வேட்பாளராக, மும்பை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலா் முா்ஜி படேல் களமிறங்கி உள்ளாா். உத்தவ் தாக்கரே அணி வேட்பாளராக மறைந்த எம்எல்ஏ ரமேஷ் லட்கேயின் மனைவி ருதுஜா லட்கே அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்த இடைத் தோ்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. இதனை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலே செய்தியாளா்களிடம் அறிவித்தாா்.

ஏற்கெனவே, சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உத்தவ் அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

உண்மையான சிவசேனை கட்சி என்னும் அங்கீகாரம் மற்றும் அதன் ‘வில் அம்பு’ சின்னம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவு செய்வதற்கான மனுவை தோ்தல் ஆணையம் விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com