மதரீதியிலான மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ள கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தசரா பண்டிகையையொட்டி நாகபுரி ரேஷிம்பக் மைதானத்தில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவ்வமைப்பின் தலைவர் மோகன் பாகவத், “அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பொருந்தும் வகையில் விரிவான ஆலோசனையை நடத்தி மக்கள் தொகையை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு எதிர்க்கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மோகன் பாகவத்தின் கருத்தை சுட்டிக் காட்டி பேசியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மோகன் பாகவத் வெளியிட்டுள்ள கருத்து தவறான நோக்கம் கொண்டது எனத் தெரிவித்துள்ள பினராயி விஜயன் இத்தகைய பேச்சுகள் நாட்டில் வகுப்புவாத வெறுப்புணர்வை கட்டவிழ்த்துவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
மேலும் அவர், “எந்த தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டிராமல் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இத்தகைய பொய்யான கருத்து வெளியிடப்பட்டுள்ளது என பினராயி விஜயன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆதாயத்திற்காக வெளியிடப்படும் இத்தகைய வெறுப்புப் பேச்சுகளை மதச்சார்பற்ற சமூகம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் எனவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.