மெய்டெனின் 4 இருமல் சிரப்பின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைப்பு!

மெய்டெனின் மருந்தியல் தொழிற்சாலையில் இருந்து இருமல் மருந்தின் மாதிரிகளை எடுத்து, கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மெய்டெனின் 4 இருமல் சிரப்பின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைப்பு!

மெய்டெனின் மருந்தியல் தொழிற்சாலையில் இருந்து இருமல் மருந்தின் மாதிரிகளை எடுத்து, கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பியுள்ளதாக ஹரியாணா சுகாதார அமைச்சர் அனில் விஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஆய்வக அறிக்கையின் அடிப்படையில், ஏதேனும் தவறு இருப்பது கண்டறியப்பட்டால், உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

ஹரியாணாவின் சோனிபட்டை சோ்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த அந்த மருந்துகள் நச்சு மற்றும் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

புரோமெத்தசைன் வாய்வழி மருந்து, கோஃபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப், மகாஃப் பேபி இருமல் சிரப், மேக்ரிப் என் இருமல் சிரப் ஆகிய நான்கு மருந்துகளும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என உலக சுகாதார அமைப்பு மருந்து பொருள்கள் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள தொடா்பதிவுகளில், ‘நச்சுத்தன்மைக்கொண்ட இந்த 4 இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இம்மருந்துடனான தொடா்பு கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நச்சுத்தன்மைக்கொண்ட மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாட்டிற்கும் வெளியிலும் பரவியிருக்கலாம் என எச்சரிக்கை தெரிவித்துள்ள சுகாதார நிறுவனம் இம்மருந்து பொருள்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சாா்பில் எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com