ஜோர்ஹத்: அசாம் மாநிலம் ஜோர்ஹத் மாவட்டத்தில் காரிகாட்டியா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானையும், அதன் குட்டியும் ராஜதானி விரைவு ரயில் மோதி பலியாகின.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு, ஒரு யானைகள் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்து செல்லும் போது, அதிலிருந்த 22 வயது பெண் யானையும், அதன் 10 மாதக் குட்டியும் ரயிலில் அடிபட்டு இறந்தன.
ஏற்கனவே, இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இங்கு ரயிலின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் ரயில் ஓட்டுநர்களுக்கு பல முறை அறிவுறுத்தியும் கூட, எதுவும் செய்யப்படவில்லை என்று ஜோர்ஹத் மாவட்ட வனத்துறை அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றிரவு ஒரு பெண் யானையும் அதன் குட்டியும் இறந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
கடந்த வாரம் புதன்கிழமையும் கோக்ரஜார் மாவட்டத்தில் மின் கம்பியில் சிக்கி மிகப்பெரிய காட்டு யானை பலியானது. யானைகள் பலியாவது நாடு முழுக்க அதிகரித்துள்ளது. இவ்வாறு யானைகள் பல்வேறு விபத்துகளில் சிக்கி, அதுவும் மனிதர்களின் நடவடிக்கையால் பலியாவது இயற்கைக்கும் இந்த உலகுக்கும் அவ்வளவு நல்லதல்ல என்பதை புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்றே கருதப்படுகிறது.