அக்.12ம் தேதி இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திரிபுராவில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் முர்மு திரிபுராவில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில் புதன்கிழமை காலை 11.15 மணியளவில் தரையிறங்க உள்ளார். முர்மு பதவியேற்ற பிறகு திரிபுரா மாநிலத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின் போது, முர்மு குவாஹாத்தியில் இருந்து கொல்கத்தா எக்ஸ்பிரஸ் அகர்தலா வரை நீடிக்கப்படும் ரயிலைக் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார்.
மேலும், நிச்சிந்தாபூரில் கட்டப்பட்ட டிரான்ஸ்-ஷிப்ட்மென்ட் யார்டை விடியோ இணைப்பு மூலம் அவர் திறந்து வைக்கிறார்.
இதைத்தவிர, மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள நரசிங்காரில் புஷ்பந்தா அரண்மனை அருங்காட்சியகம் மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.