நாட்டில் தொலைத்தொடர்பு சேவையில் தற்போது 5ஜி இணையச் சேவை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டிருப்பது குறித்து பரவலாக மக்களுக்கு செய்திகள் சென்றடைந்துள்ளன. இந்த நிலையில், 4ஜி மற்றும் 5ஜி என்று சொல்லி மக்களை ஏமாற்றும் மோசடிகள் நடக்கலாம் என்று சைபர் கிரைம் காவல்துறை எச்சரித்துள்ளது.
அதாவது, 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், இதனைக் கொண்டு மக்களை ஏமாற்றி மோசடி செய்யும் அபாயமிருப்பதாக காவல்துறை கருதுகிறது.
இதையும் படிக்க | வழிகிற தேவனும் சாக்லேட் வர்மனும் - யாருடைய பொன்னியின் செல்வன் இவன்?
எனவே, உங்கள் செல்லிடப்பேசியில் அழைக்கும் மர்ம நபர்கள், உங்கள் சிம் கார்டை 4ஜியிலிருந்து 5ஜியாக அப்டேட் செய்து தருவதாகக் கூறி ஓடிபி எண்ணைக் கேட்டால் தர வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே, பல்வேறு மோசடிகளைச் செய்து வரும் மோசடி கும்பலானது, அண்மையில் மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி ஏமாற்றி வருவது தொடர்பாக காவல்துறை எச்சரித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் சில மாவட்ட காவல்துறையினரும், நாடு முழுவதும் பல்வேறு மாநில காவல்துறையினரும் இந்த எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளனர்.
இதுதான் என்றில்லை.. 4ஜி, 5ஜி, மின் கட்டணம் செலுத்தவில்லை, சிறப்புச் சலுகை என எதைச் சொன்னாலும் ஓடிபி எண்ணை மட்டும் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவில் தற்போது தில்லி, மும்பை, கொல்கத்தா, வாராணசி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.