நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் நுட்பமும், திறமையும் இரட்டைத் தூண்கள் போன்றது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடைசி மனிதனை மேம்படுத்தும் நோக்கத்தில் வேலைகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் உலக புவிசார் அமைப்பின் கூட்டத்தில் விடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் தொழில்நுட்பம் என்பது பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைப்பதாகவே உள்ளதே தவிர விலக்கி வைப்பதாக இல்லை. புவியியல் துறையிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். புவிசார் தரவுகளின் சேகரிப்பு, உருவாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை இப்போது ஜனநாயகமயமாக்கப்பட்டுள்ளன. இது போன்ற சீர்திருத்தங்கள் டிரோன் துறை, பரந்த வானியல் துறை போன்றவற்றில் தனியார் பங்களிப்பை வளப்படுத்துகின்றன.
தனிப்பட்ட முறையில் இந்தியாவில் கடைக்கோடி கிராமம் வரையிலான நிலபரப்பின் அளவுகளை அறிந்துகொள்ள முடிகிறது. சொத்துரிமை மற்றும் பெண்களின் மேம்பாடு போன்றவை வறுமை மற்றும் பாலின வேறுபாட்டை களைந்து நிலையான வளர்ச்சியை எட்டுவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆற்றல் கொண்ட இளம் நாடு இந்தியா. உலகின் மிகப்பெரிய தொழில் முனைவோர்களைக் கொண்டது இந்தியா. 2021ஆம் ஆண்டில் இருந்ததை விட புதிய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது. இதுபோன்ற திறமை இந்தியாவின் மற்றொரு தூண் எனக் குறிப்பிட்டார்.