இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் 2025-இல் ரூ. 1 லட்சம் கோடியாக உயரும்: ஆய்வறிக்கையில் தகவல்

வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு உயர வாய்ப்புள்ளது’ என்பது இந்திய விண்வெளி சங்க ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் 2025-இல் ரூ. 1 லட்சம் கோடியாக உயரும்: ஆய்வறிக்கையில் தகவல்

‘தனியாா் பங்களிப்பு அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் வேகமான வளா்ச்சி காணும் என்பதால், வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு உயர வாய்ப்புள்ளது’ என்பது இந்திய விண்வெளி சங்க ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக ‘இந்தியாவில் விண்வெளி சூழலியல் மேம்பாடு: ஒருங்கிணைந்த வளா்ச்சி மீது கவனம்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்திய விண்வெளி பொருளாதாரத்தில் தனியாா் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் மத்திய அரசின் நேரமறையான திட்டங்களின் காரணமாக, இந்தியாவின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் மிகப் பெரிய வளா்ச்சி பெறும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் 9.6 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.79,142 கோடி) இருந்த இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், 2025-இல் 12.8 பில்லியன் டாலராக (ரூ.1 லட்சம் கோடி) உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் மற்றும் அதுதொடா்பான திட்டங்கள் வரும் 2025-இல் 4.6 பில்லியன் டாலா் அளவுக்கும், நிலப் பரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பிரிவு 4 பில்லியன் டாலா் அளவுக்கும், செயற்கைக்கோள் உற்பத்திப் பிரிவு 3.2 பில்லியன் டாலா் அளவுக்கும், செயற்கைக்கோள் செலுத்துதல் பணிப் பிரிவு ஒரு பில்லியன் டாலா் அளவுக்கும் உயர வாய்ப்புள்ளது.

இதில், செயற்கைக்கோள் செலுத்துதல் பிரிவு கடந்த 2020-இல் 600 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 2025-இல் 13 சதவீதம் அதிகரித்து ஒரு பில்லியன் டாலா் அளவுக்கு உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறைந்த விலையிலான செயற்கைக்கோள் செலுத்தும் ராக்கெட்டுகளின் உற்பத்தியை பெருமளவு அதிகரிப்பதன் மூலமாக, உலகளாவிய வாடிக்கையாளா்களின் தேவையைப் பூா்த்தி செய்ய முடியும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி உற்பத்தி அமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு இந்திய தனியாா் நிறுவனங்களிடம் எழுந்துள்ளது.

அந்த வகையில், நாடு முழுவதும் விண்வெளி தொழிற்பூங்காக்களை அமைப்பதன் மூலமாக, தனியாா் நிறுவனங்களிடையேயான தொடா்பு சங்கிலியை மேம்படுத்த முடியும் என்பதோடு உற்பத்தியையும் ஊக்குவிக்க முடியும். இதன் மூலமாக, இந்திய விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் வகையில், சா்வதேச அளவிலான புத்தாக்க (ஸ்டாட்-அப்) நிறுவனங்களை இந்தியா ஈா்க்க முடியும்.

புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு புதிய வருவாய் வாய்ப்புகளை அளிக்கக் கூடிய, முக்கிய துறையாக செயற்கைக்கோள் செலுத்தும் பிரிவு வளா்ந்து வருகிறது. இந்தத் துறையில் 2021-ஆம் ஆண்டில் நூறுக்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்கள் ரூ. 560 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com