மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் பயணிகள் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பேகான் தாலுகாவில் உள்ள பீமாசங்கர் சாலையில் காலை 6.30 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை அருகே பிவாண்டியில் உள்ள கிராமத்திலிருந்து புணே மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பீமாசங்கர் கோயிலுக்கு 27 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
பீமாசங்கர்-கோடேகான் சாலையில் ஷிண்டேவாடி அருகே பேருந்து வந்தபோது, மற்றொரு பேருந்து ஓட்டுநர், பேருந்திலிருந்து புகை வெளியேறுவதாகக் கூறினார். பின்னர், அவசர அவசரமாகப் பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.
கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், பேருந்து முழுவதும் தீ பரவத் தொடங்கி மளமளவென எரிய ஆரம்பித்தது.
பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாகப் பேருந்திலிருந்த அனைத்து பயணிகளும் எந்தவித காயமின்றி உயிர்த்தப்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான முதன்மைக் காரணம் ஷார்ட் சர்க்யூட் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.