இருமல் மருந்து சர்ச்சையில் சிக்கிய தொழிற்சாலை உற்பத்தி நிறுத்தம்: ஹரியாணா அரசு

மெய்டென் மருந்து நிறுவனத்தின் சோனிபட்டு தொழிற்சாலையில், ஒட்டுமொத்த மருந்து தயாரிப்பை முற்றிலும் நிறுத்த ஹரியாணா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருமல் மருந்து சர்ச்சையில் சிக்கிய தொழிற்சாலை உற்பத்தி நிறுத்தம்: ஹரியாணா அரசு
இருமல் மருந்து சர்ச்சையில் சிக்கிய தொழிற்சாலை உற்பத்தி நிறுத்தம்: ஹரியாணா அரசு

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாக இருந்த இருமல் மருந்தை தயாரித்த மெய்டென் மருந்து நிறுவனத்தின் சோனிபட்டு தொழிற்சாலையில், ஒட்டுமொத்த மருந்து தயாரிப்பை முற்றிலும் நிறுத்த ஹரியாணா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தனது மருந்து தொழிற்சாலை ஆலையில் கண்டுபிடிக்கப்பட்ட 12 விதிமீறல்களுக்கும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சோனிபட்டு மருந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மூன்று மருந்துகளின் மாதிரிகள் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது குறித்த ஆய்வறிக்கை இன்னும் வரவில்லை. அந்த அறிக்கை வந்த பிறகுதான் நடவடிக்கை தொடங்கும். மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் ஆய்வின் போது 12 விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், ஒட்டுமொத்தமாக மருந்து உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனிஷ் விஜ் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஞ்சுத் தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் சிரப்கள்தான் காரணமா என்று உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருகிறது.

ஹரியாணாவின் சோனிபட்டுவைச் சோ்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த அந்த மருந்துகள் நச்சு மற்றும் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

புரோமெத்தசைன் வாய்வழி மருந்து, கோஃபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப், மகாஃப் பேபி இருமல் சிரப், மேக்ரிப் என் இருமல் சிரப் ஆகிய நான்கு மருந்துகளும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என உலக சுகாதார அமைப்பு மருந்து பொருள்கள் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டிருந்த தொடா்பதிவுகளில், ‘நச்சுத்தன்மைக்கொண்ட இந்த 4 இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இம்மருந்துடனான தொடா்பு கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நச்சுத்தன்மைக்கொண்ட மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாட்டிற்கும் வெளியிலும் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை தெரிவித்துள்ள சுகாதார நிறுவனம் இம்மருந்து பொருள்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சாா்பில் எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை தெரிவித்துள்ளது.

மேலும், ஆய்வு முடிவுகளில் இருமல் மருந்துகள் டை எத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இவ்விரு வேதியியல் பொருள்களை மனிதா்கள் பயன்படுத்தும் போது உயிரிழிப்புக்கு காரணமாகும் என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இந்த விவகாரம் குறித்த விரிவான ஆய்வு தகவல்களை உலக சுகாதார அமைப்பு இன்னும் பகிரவில்லை என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com