ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சிந்தி வனப்பகுதியில் திங்களன்று இரவு ஒடிசா சிறப்பு நடவடிக்கை குழு மற்றும் மாவட்ட தன்னார்வப் படையினர் நடத்திய தாக்குதல் நடவடிக்கையின் போது பெண் மாவோயிஸ்டு ஒருவர் கொல்லப்பட்டதாக தெற்கு பகுதி ஐஜி சத்யபிரதாபோயி தெரிவித்தார்.
பல மணி நேரம் பாதுகாப்புப் படையினருக்கும் எல்டபிள்யூஇ.,களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், அதில் சுமார் 20 மாவோயிஸ்டுகள் தப்பிச் சென்றுள்ளனர்.
மறுநாள் அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் பெண் மாவோயிஸ்ட்டின் சடலமும், அவரது துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஒடிசாவில் கொல்லப்பட்ட முதல் பெண் மாவோயிஸ்ட் இவராவர்.
உயிரிழந்த பெண் மாவோயிஸ்டு கந்தமால்-கலஹாண்டி-பௌத்-நாயகர் (கேகேபிஎன்) பிரிவின் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்டுகள்) முகாமில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
கந்தமால் காவல்துறை கண்காணிப்பாளர் பி வினித் அகர்வால் கூறுகையில்,
அப்பகுதியில் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்திலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் பிற பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு துமுடிபந்தா பகுதியில் இதேபோன்ற துப்பாக்கிச் சண்டையில் பெண் மாவோயிஸ்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.