காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து வேட்பாளர் சசி தரூர் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தி குடும்பத்திலிருந்து போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராகவுள்ளார்.
அக். 17-ஆம் தேதி நடைபெறும் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கிடையே நேர்க்கு நேர் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சசி தரூர் பேசியதாவது:
நாங்கள் தேர்தலில்தான் போட்டியிடுகிறோம், எங்கள் கட்சிக்குள் பகைமை உணர்வு இல்லை. கார்கே எனது மூத்த தலைவர். அவருடன் நான் நெருக்கமாக பணியாற்றியுள்ளேன். கட்சியை வலுப்படுத்துவதற்காக இரண்டு நண்பர்களுக்கு இடையே நடைபெறும் தேர்தல்.
கட்சியில் மாற்றம் வேண்டுமா? எல்லாவற்றிலும் நீங்கள் திருப்தி அடைந்துவிட்டீர்களா? கட்சியில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நினைத்தால், எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்.
மேலும், பல கட்சித் தலைவர்கள் கார்கேவை சந்தித்து அவரை வரவேற்றனர். ஆனால், அதை எனக்கு செய்யவில்லை. நான் கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை. இதுகுறித்து நான் புகார் கூறவில்லை. ஆனால், இதிலுள்ள வித்தியாசம் தெரியவில்லையா? எனத் தெரிவித்தார்.