இன்றைக்கு சோதனை மேற்கொள்ளும் இதே விசாரணை அமைப்புகள் மூலம் பாஜகவினரின் காதைப் பிடித்து இழுத்துவரும் நாள் வரும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மேற்குவங்க மாநிலம் பபானிபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வியாழக்கிழமை கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இன்று நீங்கள் (பாஜக) அதிகாரத்தில் உள்ளீர்கள். விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுகிறீர்கள். நாளை உங்களிடம் அதிகாரம் இருக்காது. இதே விசாரணை அமைப்புகள் உங்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து உங்கள் காதைப் பிடித்து வெளியே இழுத்துவரும். அந்த நாள் விரைவில் வரும்.
துர்கா பூஜையின் போது வதைபடும் அசுரர்கள் இடத்தில் மகாத்மா காந்தியை வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த அநாகரீகத்திற்கு மக்கள் பதிலளிப்பார்கள். நான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளேன். எனினும் துர்கா பூஜையின்போது எதையும் தெரிவிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.