தேசிய தலைநகர் முழுவதும் இந்தாண்டு பெரியளவில் சத் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கேஜரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தலைநகர் முழுவதும் இந்தாண்டு 1100 இடங்களில் உள்ள நீர்நிலைகளை தில்லி அரசு மேம்படுத்தும், மேலும் பூஜைகளை ஏற்பாடு செய்வதற்கான செலவை அரசே ஏற்கும்.
இரண்டு வருட கரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இந்தாண்டு தில்லி நகரம் முழுவதும் 1100 இடங்களில் சத் பூஜைகளை அரசு பெரிய அளவில் ஏற்பாடு செய்ய உள்ளது. இந்த விழாவை நகரில் கொண்டாட ரூ.25 கோடி செலவிட உள்ளோம்.
கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சத் பூஜை பொது இடங்களில் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தாண்டு பூஜையைக் கொண்டாடத் தேவையான பவர் பேக்கப், ஆம்புலன்ஸ்கள், கழிப்பறைகள் மற்றும் பிற வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்துள்ளோம்.
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நகரத்தில் பெரிய அளவில் சத் கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2014இல் அரசு நிதியுதவியுடன் 69 இடங்களில் குறைந்தபட்சம் ரூ.2.5 கோடி செலவில் சத் பூஜை நடத்தப்பட்டது. ஆனால், இந்தாண்டு அரசு நிதியுதவியுடன் 1,100 இடங்களில் சத் பூஜை கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி காவல்துறை மேற்கொள்ளும். பூஜை நடைபெறும் இடங்களில் கூடாரங்கள், ஒலி அமைப்புகள், நாற்காலிகள் மற்றும் மேஜைகள் மற்றும் எல்இடி திரைகளும் அமைக்கப்படும். குடிநீர், தூய்மை, பொதுமக்கள் வசதிக்காகவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
கரோனா தொற்றுக்கு முடிவுகட்டவும், நாடு வளர்ச்சியடையவும் சக்தி மையாவிடம் பிரார்த்தனை செய்யுமாறும், கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். 2022-ம் ஆண்டுக்கான "சத் பூஜை" அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.