தரவரிசையில் கீழே உள்ள அதிகாரிகள் விசாரணையின்றி வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். ஆனால்,ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் அண்மையில் 36 காவல் துறை அதிகாரிகளை அவர்களது பணிக்காலம் முடியும் முன்பே அவர்களுக்கு ஓய்வளித்து அறிவித்தது. ஊழலில் ஈடுபட்டது, செயல்பாடுகளில் குறைபாடு மற்றும் சமுதாயத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது போன்றன அவர்களுக்கு பணி ஓய்வு கொடுக்கப்பட்டதற்கு காரணங்களாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மெகபூபா முப்தியின் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: விக்ரம் - பா.ரஞ்சித் படம் குறித்து புதிய தகவல்
இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “துணை ஆளுநரின் கீழான நிர்வாகம் ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகளின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அதிகாரிகள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களின் குற்றங்கள் மீது எந்த ஒரு விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. ஆனால், தரவரிசை அடிப்படையில் கீழே உள்ள அதிகாரிகள் எந்த ஒரு விசாரணையுமின்றி வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர்.” என்றார்.